உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்தும் நிறுவனங்களுக்குபசுமை சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

Published On 2023-06-29 07:16 GMT   |   Update On 2023-06-29 07:16 GMT
  • காற்றாலை மற்றும் சோலார் எரிசக்தி உற்பத்தி செய்து தங்கள் நிறுவனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
  • சர்வதேச சந்தைகளில் 'வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமையும், கவுரமும் கிடைக்கிறது.

திருப்பூர்:

தமிழகத்தில் கடந்த 2009-11 காலங்களில் ஏற்பட்ட மின்தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. காற்றாலை மற்றும் சோலார் எரிசக்தி உற்பத்தி செய்து தங்கள் நிறுவனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகளும் மின்சாரத்தை மட்டுமே சார்ந்து இயங்காமல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு மாற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. திருப்பூர் பனியன் தொழிலை பொறுத்தவரை, ஒட்டுமொத்த மின்தேவைக்கு அதிகமாகவே காற்றாலை மற்றும் சோலார் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மறுசுழற்சி தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. சர்வதேச சந்தைகளில் 'வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமையும், கவுரமும் கிடைக்கிறது.

தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளும், காற்றாலை மற்றும் சூரியஒளி மின் உற்பத்தி செய்து, தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. இதனால், மின் கட்டண உயர்வு அவர்களை பாதிப்பதில்லை. மின்சார பயன்பாட்டுக்கான நிலை கட்டணத்தில் மட்டும் சலுகையை எதிர்பார்க்கி ன்றனர்.

கோவையில் நடந்த தமிழக அரசின் தொழில்நுட்ப குழு கூட்டத்தில் புதுப்பித்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, பசுமை சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். அதனால் சர்வதேச சந்தைகளில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு உயரும் என்று தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர் சங்க (டாஸ்மா) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:-

தமிழகத்தில் காற்றாலை மற்றும் சோலார் கட்டமைப்பு வாயிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், நூற்பாலைகளின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு உள்ளது. காற்றாலையில் மட்டும் 3,500 மெகாவாட் கொள்திறன் அளவுக்கு மின்சாரம் உற்பத்தியாகிறது. இதேபோல் சோலார் மூலமாகவும், அதிக அளவு மின்சாரம் உற்பத்தியாகிறது.

வெளிநாட்டு சந்தைகளில் பசுமை சான்றிதழ் பெற்ற நிறுவனங்களுக்கு அதிக முன்னுரிமையும், வர்த்தக வாய்ப்புகளும் கிடைக்கிறது. தமிழக அரசு காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, பசுமை சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

கட்டண அடிப்படையில் வழங்கினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என தொழில்நுட்ப குழு கூட்டத்தில் வலியுறுத்தினோம். கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் காந்தி மற்றும் அரசு செயலர்கள் விரிவான அறிக்கையாக வழங்கினால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி செய்து வரும் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் பசுமை சான்று வழங்குவது மிகுந்த பயனளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News