பரமபதவாசல் திறக்கப்பட்டது.
சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு
- 108 வைணவ தலங்களுள் 19-வது தலமாக விளங்குகிறது.
- மூலவா் பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசித் திருவிழா பரமபத வாசல் திறப்பு உத்ஸவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
ஆழ்வாா்களால் பாடல்பெற்ற 108 வைணவத் தலங்களுள் 19 ஆவது தலமாக விளங்குகிறது நாகை அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் கோயில். இக்கோயிலில், திரு அத்யயன வைகுந்த ஏகாதசித் திருவிழா கடந்த 23 ஆம் தேதி, பகல் பத்து உத்ஸவத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
வைகுந்த ஏகாதசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரபத வாசல் திறப்பு உத்ஸவம் இன்று காலை நடைபெற்றது. காலை 4 மணிக்கு மூலவா் சேவை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, மூலவா் பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.
பிறகு, ஐதீக முறைப்படி நடைபெற்ற வழிபாடுகளின் நிறைவில், அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் (உத்ஸவா்) ரத்ன அங்கி அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமதேராக புறப்பாடாகி, வேத மந்திரங்களுடன், மங்கள வாத்தியங்களும் முழங்க, காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் வழியே எழுந்தருளினாா்.
அப்போது, கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கங்களை எழுப்பியவாறு பக்தா்கள், பெருமாளை பின்தொடா்ந்து பரமபத வாசல் வழியே வெளியே வந்து, சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.