ஏற்காட்டில் 108 ஆம்புலன்சில் அழைத்து வரும் வழியில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
- பிரசவத்திற்காக மாதம்மாள் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
- நேற்று மாலை பிரசவ வலி ஏற்படவே உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார் (வயது 28). இவருக்கும் சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள தெப்பக்காடு அடுத்த காசிகல் பகுதியைச் சேர்ந்த மாதம்மாள் ( 22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிரசவத்திற்காக மாதம்மாள் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.நேற்று மாலை பிரசவ வலி ஏற்படவே உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர் சிலம்பரசன் மற்றும் ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாதம்மாளை அழைத்துக்கொண்டு வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து சுதாரித்துக்கொண்டு, தாயையும், குழந்தையும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.