உள்ளூர் செய்திகள்

வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் 4,747 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

Published On 2022-11-13 09:01 GMT   |   Update On 2022-11-13 09:01 GMT
  • 36 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
  • வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர் சாகுபடியும், 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து மாவட்ட வேளாண் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சேர்த்து திருவாரூரில் 25 ஏக்கர், திருத்துறைப்பூண்டியில் 1020 ஏக்கர், முத்துப்பேட்டையில் 712 ஏக்கர், மன்னார்குடியில் 350 ஏக்கர், நன்னிலத்தில் 1085 ஏக்கர், நீடாமங்கலத்தில் 5 ஏக்கர், குடவாசலில் 725 ஏக்கர், வலங்கைமானில் 675 ஏக்கர் என மொத்தம் 4747 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.

அதில் 36 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 568 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News