திருச்செங்கோட்டில் 32 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
- தமிழக அரசு திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள 5 நீர் நிலைகளை மேம்படுத்த 5 கோடியே 94லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது.
- நகராட்சி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள இடங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்படும்.
திருச்செங்கோடு:
தமிழக அரசு நீர் நிலைகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருச்செங்கோடு அம்மன் குளக் கரைகளை மேம்படுத்தி நடைமேடை அமைக்க ரூ 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் குளத்தின் மேற்கு புற கரையில் 32 கடைகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப் பட்டிருந்தது.
அதனை அகற்றிக் கொள்ள நகராட்சி நிர்வாகத்தினர் நோட்டீஸ் கொடுத்திருந்தனர் ஆனாலும் யாரும் கடைகளை அகற்றாததால் நகராட்சி ஆணையாளர் கணேசன் மற்றும் நகராட்சி பொறியாளர் சண்முகம் ஆகியோர் நகராட்சி பணியாளர்களுடன் சென்று பொக்லைன் உதவியுடன் கடைகளை அகற்ற முயன்றனர்.
அப்போது கடை உரிமையாளர்கள் தாங்களாகவே கழட்டி கொள்வதாகவும் இடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதன் பேரில் கடைகளை அவர்களாகவே அகற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது இதையடுத்து உடனடியாக கடைகள் அகற்றும் பணி நடந்தது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் கணேசன் கூறியதாவது:-
தமிழக அரசு திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள 5 நீர் நிலைகளை மேம்படுத்த 5 கோடியே 94லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது. அதன்படி சூரியம்பாளையம் ராஜா கவுண்டம்பாளையம் ஏரிகள், அம்மன்குளம் பெரிய தெப்பக்குளம் மலை அடி குட்டை ஆகியவற்றில் கரைகள் மேம்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது .
இந்த நீர்நிலைகள் தூர்வாரி மேம்படுத்தி பராமரிக்கப்பட இருப்பதால் அம்மான் குளம் பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த 32 கடைகளை அகற்றி உள்ளோம். மேலும் இதுபோல் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள இடங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.