உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர்க்கடன்

Published On 2022-06-08 10:24 GMT   |   Update On 2022-06-08 10:24 GMT
  • கடன் மனுவை சமர்ப்பித்து பயிர்க்கடன் பெற்று பயன் அடையலாம்.
  • அனைத்து வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட விவசாயிகள் தங்களது ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, நில உடைமை தொடர்பான சிட்டா, பயிர்க்கடன் தொடர்பான வட்டாட்சியரின் அனுபோக சான்றிதழ் மற்றும் அடங்கல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றுடன் தங்களது இருப்பிடம் அல்லது விவசாயம் பயிர் சாகுபடி செய்யும் நில அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை உடன் தொடர்பு கொண்டு கடன் மனுவை சமர்ப்பித்து பயிர்க்கடன் பெற்று பயன் அடையலாம்.

மேலும் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், குறைந்த வட்டியில் சுய உதவிக்குழுக்களுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் கடன் மற்றும் சிறுபான்மை யினர் கடன் போன்ற அனைத்து வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்கு தொகை மற்றும் நுழைவுக்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்த்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயன் அடையலாம்.

இதில் ஏதேனும் சேவை குறைபாடுகள் இருந்தால் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனரை அல்லது உதவி பொதுமேலாளர், கடன் மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

Tags:    

Similar News