ஓசூரில் தீ விபத்தில் உடல் கருகி முதியவர் சாவு
- திடீர் மின் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது.
- முதியவர் கிருஷ்ணப்பா தீயில் கருகி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
ஓசூர்
ஓசூர் அருகேயுள்ள குமுதேப்பள்ளி விக்னேஷ் நகர் கங்காதீஸ்வரர் கோயில் அருகில் வசித்து வருபவர் அம்பிகா (37) .கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் இவருடன் அவரது தந்தை கிருஷ்ணப்பாவும் வசித்து வருகிறார்.
நேற்று அம்பிகா திருமண நிகழ்ச்சிக்காக தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றார். அவரது தந்தை கிருஷ்ணப்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் அம்பிகாவின் வீட்டில்
திடீர் மின் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது பயங்கர சத்தமும் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீயானது அதிக அளவில் பரவியதால், உடனடியாக அவர்கள் ஓசூர் தீயணைப்புத்துறை மற்றும் அட்கோ போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஒசூர் தீயணைப்புத்துறையினர் வீட்டின் கதவை உடைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது முதியவர் கிருஷ்ணப்பா தீயில் கருகி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.