கோவையில் 9-ம் வகுப்பு மாணவி கடத்தல்
- பஸ் கண்டக்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.
கவுண்டம்பாளையம்,
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கோவை கவுண்டம்பாளையத்தல் பெற்றோருடன் தங்கி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வாரம் சிறுமி வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரில் சிறுமி பஸ் கண்டக்டர் ஒருவருடன் சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் பல்லடத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.
மேலும் விசாரணையில் சபரிநாதன் கடந்த ஒருமாதமாக காதலிப்பதாக கூறி சிறுமியை கடத்தி சென்றதும், தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்ததும், இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சபரிநாதன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.