கோவையில் மொபட்டில் இருந்து தவறி விழுந்த 2 முதியவர்கள் பலி
- அய்யம்பாளையம்- செஞ்சேரிபுதூர் ரோட்டில் சென்ற போது திடீரென நிலைதடுமாறி அம்மாசி கீழே விழுந்தார்.
- சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள வரப்பாளையத்தை சேர்ந்தவர் அம்மாசி (வயது 64). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அவரது மொபட்டில் கறி வாங்குவதற்காக எஸ்.அய்யம்பாளையத்துக்கு சென்றார்.
மொபட் அய்யம்பாளையம்- செஞ்சேரிபுதூர் ரோட்டில் சென்ற போது திடீரென நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அம்மாசிக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அம்மாசி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இடையர்பாளையம் பவானி வீதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் (70). சம்பவத்தன்று இவர் மொபட்டில் அண்ணா நகர் சோதனை சாவடி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜ்மோகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.