கலெக்டர் கார்த்திகேயன்
நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்- கலெக்டர் கார்த்திகேயன் தகவல்
- தாசில்தார் தலைமையில் வருவாய்துறையினர் அடங்கிய குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- தனியார் பள்ளிகளில் தற்போதே மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடு முறை அளிக்கப் பட்டுள்ளது.
மீண்டும் பள்ளிகள் திறப்பு
இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்கவும், வகுப்பறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை துரித படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்வதற்காகவும், அவற்றை சீரமைத்து சான்று வழங்கிடவும் நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் செல்வராஜ் சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தாசில்தார்களுக்கு உத்தர விட்டார்.
குழு ஆய்வு
இதைதொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவிலும் தாசில்தார் தலைமையில் வருவாய்துறை யினர் அடங்கிய குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் இதர கட்டிடங்களை பள்ளி திறப்பதற்கு முன்பாக சரிசெய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளிலும், கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து தீயணைப்புத்துறை அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தாசில்தார்கள் மூலம் கூட்டுப் புலத்தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
மாணவர் சேர்க்கை
மேலும் ஜூன் மாதம் முதல் வாரம் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் தற்போதே மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க மும்முரம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக 6-ம் வகுப்பில் சேர்ப்பதற்காக அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குவிந்து வருகின்றனர்.
தகவல் தெரிவிக்கலாம்
எனவே பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கச் செல்லும் பெற்றோர், அந்தப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் ஏதும் இருப்பதை கண்டறிந்தால் கலெக்டர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 'வணக்கம் நெல்லை கைப்பேசி எண் -97865 66111 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.