உலக அமைதிக்கு பங்களிக்க கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன்
- லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.மோகன் பேட்டி
- ஐ.நா.வின் அமைதிப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குன்னூர் :
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு இந்தியா மட்டுமின்றி நட்பு நாடுகளை சேர்ந்த வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியின் முதல்வராக லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.மோகன் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை தளபதியாக தெற்கு சூடானில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புகழ் பெற்ற வெலிங்டன் ராணுவ கல்லூரியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 700 முப்படை அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு எனது பணிக்காலத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய பாதுகாப்பு துைற மந்திரி, தமிழ்நாடு முதல்-அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் வந்துள்ளனர்.
உலக அமைதிக்கு இந்தியாவின் பங்களிப்பு அபரிமிதமானது. ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் பணியாற்றிய 160 இந்தியர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த எண்ணிக்கையில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது.
தற்போது ஐக்கிய நாடுகள் சார்பில் தெற்கு சூடானில் அமைதிப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டு உள்ளேன்.
இந்த படைக்கு தலைமை ஏற்க கிடைத்த வாய்ப்பு எனக்கும், நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. உலக அமைதிக்கு இந்தியா அளிக்கும் பங்களிப்பில் நானும் பங்களிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய, மாநில அரசுகள் எல்லாவித உதவிகளையும் செய்து வருகிறார்கள். எங்களுக்கு எந்தவிதமான உதவிகள் தேவைப்பட்டால் தமிழக அரசு முன்வந்து செய்து தருகிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்த உதவி ஆனாலும் மத்திய மாநில அரசுகள் செய்து தருகிறார்கள்.