உள்ளூர் செய்திகள்

அருவியில் நீர்வரத்தை படத்தில் காணலாம்.

தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு

Published On 2022-06-18 10:30 IST   |   Update On 2022-06-18 10:30:00 IST
  • தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நீர் வரத்தொடங்கியது.
  • தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை

கூடலூர்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையினால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையினால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்து வரத்தொடங்கி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு அணையில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.55 அடியாக உள்ளது. வரத்து 390 கன அடி. திறப்பு 511 கன அடி. நீர் இருப்பு 4826 மி.கன அடி. வைகை அணையின் நீர்மட்டம் 56.43 அடி. வரத்து 80 அடி. திறப்பு 869கன அடி. இருப்பு 2955 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45 அடி. வரத்து 174 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.18 அடி. திறப்பு 6 கன அடி.

கொடைக்கானல் மற்றும் அதனையொட்டியுள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளம் அடுத்துள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மறு உத்தரவு வரும் வரை இங்கு பொதுமக்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரியாறு 6.6, தேக்கடி 5.8, கூடலூர் 14.8, உத்தமபாளையம் 0.2, வீரபாண்டி 21.4, மஞ்சளாறு 27, சோத்துப்பாறை 4.5, ஆண்டிபட்டி 2, போடி 24, பெரியகுளம் 53 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News