உள்ளூர் செய்திகள்

'நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு?- கல்வித்துறை பட்டியல் வெளியீடு

Published On 2023-06-19 03:12 GMT   |   Update On 2023-06-19 03:12 GMT
  • தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் எழுதியதில், 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றனர்.
  • நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 600 மதிப்பெண் மேல் பெற்றவர்கள் ஒரு மாணவி உள்பட 3 பேர் ஆவார்கள்.

சென்னை:

நாடு முழுவதும் 20 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய 'நீட்' தேர்வு முடிவு கடந்த 13-ந்தேதி வெளியானது. இந்த தேர்வில் 11 லட்சத்து 46 ஆயிரம் மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று இருந்தனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் எழுதியதில், 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்றவர்களில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றனர் என்ற விவரத்தை கல்வித்துறை கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி, அரசு பள்ளி மாணவ-மாணவிகள் நடப்பாண்டில் 'நீட்' தேர்வை 12 ஆயிரத்து 997 பேர் எழுதியதாகவும், அவர்களில் 3 ஆயிரத்து 982 பேர் வெற்றி பெற்றதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைவு என்றாலும், அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட அதிகமான பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 'நீட்' தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றார்கள் என்ற விவரத்தையும் கல்வித்துறை நேற்று வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 600 மதிப்பெண் மேல் பெற்றவர்கள் ஒரு மாணவி உள்பட 3 பேர் ஆவார்கள். 501 மதிப்பெண்ணுக்கு மேல் 23 பேரும், 401 மதிப்பெண்ணுக்கு மேல் 127 பேரும், 301 மதிப்பெண்ணுக்கு மேல் 437 பேரும், 201 மதிப்பெண்ணுக்கு மேல் 651 பேரும், 107 மதிப்பெண்ணுக்கு மேல் 2 ஆயிரத்து 741 பேரும் பெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவர்களில் எத்தனை பேருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

Tags:    

Similar News