சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்- கேரளாவுக்கு, தமிழக அரசு வலியுறுத்தல்
- சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும்.
- இந்த விஷயத்தில் கேரள முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.
சிறுவாணி குடிநீர்த் திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பைப் பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் கேரள அரசுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, ஏற்கனவே கடிதம் எழுதியிருந்ததாகவும், கேரள முதலமைச்சர் இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.