உள்ளூர் செய்திகள்

வள்ளியூரை புறக்கணித்து செல்லும் அரசு பஸ்கள்- வணிகர் சங்க பேரமைப்பு புகார்

Published On 2023-04-22 08:43 GMT   |   Update On 2023-04-22 08:43 GMT
  • அரசு பஸ்கள் அனைத்து ஊர்களுக்கும் தடையின்றி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்
  • நாகர்கோவிலில் இருந்து டி.எல்.எக்ஸ். என்ற பெயரில் 25 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

வள்ளியூர்:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மாவட்ட தலைவர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் ஆசாத், மாவட்ட பொருளாளர் ராஜன் ஆகியோர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல நிர்வாக இயக்குனரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-

மதுரை மண்டலத்தை சேர்ந்த மதுரை பஸ்கள் 18, ஏ.சி. வகை பஸ்கள் 3, விருதுநகர் டெப்போ பஸ் 1, பழனி டெப்போ பஸ் 2, குமுளி டெப்போ 3, திண்டுகல் டெப்போ 2, போடி டெப்போ 2 ஆக 31 பஸ்கள் நாகர்கோவிலுக்கு செல்கின்றன.

இந்த அனைத்து பஸ்களும் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒன்-டூ-ஒன் என வள்ளியூர் ஊருக்குள் வராமல் புற வழிச்சாலை வழியாக செல்கின்றது.

மேற்குறிப்பிட்டுள்ள பஸ்கள் தடம் எண் எழுதப்படாத பஸ்களாகவும் செல்கின்றன. அரசு பஸ்கள் அனைத்து ஊர்களுக்கும் தடையின்றி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என விதிமுறையும் அரசின் ஒழுங்கும் இருக்கின்ற நிலையில் வள்ளியூரில் பஸ் நிறுத்தம் இருந்தும் நெல்லை -நாகர்கோவில் பஸ் நிலை யங்களில் காத்திருக்கும் வள்ளியூர் பயணிளை ஏற்றாமல் புறவழிச்சாலை வழியாக செல்கின்றது.

வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் வள்ளியூர் பஸ் நிலையத்தை நம்பிதான் வெளியூர்களுக்கு செல்கிறார்கள். மதுரை மண்டலத்தில் இருந்து வள்ளியூர் வழியாக 31 பஸ்களை இயக்கியும் மதுரை, திண்டுகல், குமுளி, பழனி, போடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்கின்ற வள்ளியூர் பயணிகள் இந்த அரசு பஸ்களில் வள்ளி யூருக்கு வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு அரசு போக்கு வரத்து துறைக்கு வருமான இழப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

எனவே இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி மதுரை மண்டலத்தில் இருந்து வள்ளியூர் வழியாக செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் வள்ளியூர் பஸ் நிலைத்திற்கு வந்து பயணி களை ஏற்றவும், இறக்கி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நெல்லை மண்டலத்தில் நாகர்கோவி லில் இருந்து டி.எல்.எக்ஸ். என்ற பெயரில் 25 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர வேளாங் கண்ணிக்கு செல்லும் பஸ், ஞாயிற்றுக்கிழமை தினங்களில் சென்னை செல்லும் சிறப்பு பஸ்கள், திருவண்ணாமலை செல்லும் சிறப்பு பஸ்கள் அனைத்தும் வள்ளியூர் பஸ் நிலையம் வருவதில்லை.

மேற்குறிப்பிட்ட பஸ்களும் தடம் எண் குறிப்பிடப்பாத பஸ்களாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2010-ம் வருடத்தில் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இடைநில்லா பஸ்களாக 3 பஸ்களை இயக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தார்.

அதே நேரத்தில் 3 பஸ்கள் வள்ளியூர், பணகுடி, நாங்குநேரி ஊர்களில் நின்று செல்லவும் அனுமதி வழங்கினார்கள். ஆனால் தற்போது நாகர்கோவிலில் இருந்து 30 பஸ்கள் 5 முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு பஸ் வீதம் பயணிகள் இருந்தாலும் இல்லா விட்டாலும் இயக்கப்பட்டு வருகிறது.

இதனை எதிர்கொள்ளும் வகையில் மதுரை மண்டலத்தில் இருந்து 30 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த 60 பஸ்களும் வள்ளியூர் பஸ் நிலையம் வந்து செல்லாமல் புற வழிச்சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

மார்த்தாண்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் சாதாரண பஸ் நாகர்கோவில் வரையில் சாதாரண பஸ்சாகவும், நாகர்கோவிலில் இருந்து நெல்லை வரையில் இடை நில்லா பஸ்சாகவும் இயக்கப்பட்டு பின்னர் நெல்லையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சாதாரண பஸ்சாகவும் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் வள்ளியூர் பகுதி மக்கள் வேளாங்கண்ணிக்கு செல்ல முடியாமல் திணறுகின்றனர். எனவே தடம் எண் எழுதப் படாத அனைத்து டி.எல்.எக்ஸ். பஸ்களையும் வள்ளியூர் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News