சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்.
பாவூர்சத்திரத்தில் இன்று அதிகாலை 4 வழி சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்- அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்
- தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக பஸ் பாய்ந்தது.
- சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் பள்ளத்தில் சிக்கியிருந்த பஸ்சை மீட்டனர்.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், நெல்லை வழியாக ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ் இன்று அதிகாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
பஸ்சை டிரைவர் மாடசாமி ஓட்டி வந்தார். பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக பஸ் பாய்ந்தது.
இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறல் சத்தம் போட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இன்றி உயிர்தப்பினர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் பள்ளத்தில் சிக்கியிருந்த பஸ்சை மீட்டனர்.
இதுகுறித்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பணி நடந்து வருவதை குறிப்பிடும் வண்ணம் அதற்கான எச்சரிக்கை பலகைகள், பாதுகாப்பு மற்றும் பணி உபகரணங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். எவ்வித விபத்துக்களும் இன்றி பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.