உள்ளூர் செய்திகள்

ஓசூரில் வாலிபர் கொலை வழக்கில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2023-07-31 15:12 IST   |   Update On 2023-07-31 15:12:00 IST
  • ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்த போது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
  • அந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர ஸ்ரீ ராம் சேனா செயலாளராக இருந்தவர் மோகன்பாபு (வயது25). இவர் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஓசூர் சொப்பட்டியை சேர்ந்த ரவுடி திலக் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வந்த திலக் கடந்த மே மாதம் 12-ந் தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்த போது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மோகன்பாபு கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக அவரது தந்தை திம்மராயப்பா (54), மத்திகிரி ரவுடி சசிக்குமார் (24) என்பவர் உதவியுடன் திலக்கை கொலை செய்தது தெரிய வந்தது.

அந்த கொலையில் திம்மராயப்பா, சொப்பட்டி சிவக்குமார் (23), தின்னூர் வெங்கடேஷ் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சசிக்குமார் சங்ககிரி கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி சசிக்குமார் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, ரவுடி சசிக்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் சரயு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல், சேலம் மத்திய சிறையில் உள்ள சசிக்குமாரிடம் வழங்கப்பட்டது, இதையடுத்து ரவுடி சசிக்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Tags:    

Similar News