கருமத்தம்பட்டியில் தேங்கி கிடக்கும் குப்பைகள்
- அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
- சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டி நகராட்சியில் 20 வார்டுகள் உள்ளன. அங்கு உள்ள ஒரு சில வார்டுகளில் சரிவர குப்பைகள் அகற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் 17-வது வார்டு பகுதியில் உள்ள கருமத்தம்பட்டி-புதூர் ரோட்டில் சாலையோரம் குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கின்றன. இதில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் குப்பைகளை கிளறி சாலையில் வீசுவதால், பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. கருமத்தம்பட்டி-புதூர் ரோட்டில் பள்ளி உள்ளது. குப்பைகளில் துர்நாற்றம் வீசுவதால் மாணவ-மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.