உள்ளூர் செய்திகள்

ஏலகிரி-நாகாவதி சாலையில் வளர்ந்து இருக்கும் முட்புதர்களையும் அந்த வழியாக வருபவர்களையும் படத்தில் காணலாம்

சாலையின் இருபுறங்களிலும் முட்புதர்களால் அடிக்கடி விபத்துக்கள்

Published On 2023-10-06 15:41 IST   |   Update On 2023-10-06 15:41:00 IST
  • தருமபுரி அருகே சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்துள்ள முட்புதர்களால் விபத்துகள் நடந்து வருகிறது.
  • வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் உள்ளது நாகாவதி அணையை அடுத்த ஏர்ரப்பட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு சாலை நல்லம்பள்ளி, கெங்க லாபுரம், ஏலகிரி வழியாக வனப்பகுதிக்கு இடையில் செல்கிறது. மேலும் இந்த சாலை எர்ரப்பட்டி அடுத்த அரகாசனைஅள்ளி, சின்னம்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று பென்னாகரம்-மேச்சேரி சாலையில் இணைகிறது. நாள்தோறும் அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என்று இச்சாலையின் வழியாக சென்று வருகிறது. இந்நிலையில் ஏலகிரியை அடுத்த எள்ளுகுழி என்னும் பகுதியில் வனப்பகுதியில் செல்லும் இச்சாலையின் இரு புறங்களிலும் முட்புதர்கள் வளர்ந்து போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

பஸ் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் இச்சாலையில் செல்லும் போது, இருசக்கர வாகனங்க ளில் செல்வோர் சாலை ஓரம் செல்ல முடியாமல் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்புகள் வரை நடைபெற்று வருகிறது. வனப்பகுதியில் இந்த சாலை உள்ளதால் வனத்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தும், இதுவரை எழுத நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

ரோட்டில் இரு புறங்களிலும் முப்புதர்கள் உயர்ந்து வளர்ந்திருப்பதால் நாள் தோறும் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் விலங்குகள் குறித்த அச்சம் நிலவுகிறது. சிறுத்தை, கரடி போன்றவை புதரில் பதுங்கி இருந்து தாக்க கூடும் என்று அந்த வழியாக செல்பவர்கள் அஞ்சுகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இப்பகுதியில் விபத்துக்கள் தொடர்கதையாகி வருகிறது. இனியாவது மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இந்த முட்புதர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர். கிராமப் பகுதிகளுக்கு தரமான சாலைகள் அமைத்தும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. தருமபுரி மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இனியாவது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

Similar News