உள்ளூர் செய்திகள்

புகார் கொடுக்க போலீஸ் நிலையத்துக்கு வந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட பூரணச்சந்திரன்.

ஜெர்மனியில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது

Published On 2022-08-05 15:16 IST   |   Update On 2022-08-05 15:16:00 IST
  • இசைக்கலைஞர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் என கூறி அவர்களிடமிருந்து ரூ.54.30 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
  • 15 பேரை வெளிநாடு அனுப்புவதாக கூறி சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை, திருவிழந்தூர் பெருமாள் கோயில் மேலவீதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் பூரணச்சந்திரன் (28). புரோகிதர். இவர் ஜெர்மனியில் நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான் பணிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறி தன்னுடன் தொழில் முறையில் பழக்கத்தில் உள்ள சீர்காழி வட்டம் திருப்புங்கூரைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான் செந்தில்குமரன் (52) மற்றும் சீர்காழி, திருக்கடையூர், திருமணஞ்சேரி, பெருஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்கள் 26 இசைக் கலைஞர்களிடம் ஜெர்மனியில் இசைக்கலைஞர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் என்று கூறி அவர்களிடமிருந்து ரூ.54.30 லட்சம் பணம் பெற்றுள்ளார்.

அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான விசா கொடுத்ததுடன், கடந்த மாதம் 28-ம் தேதி இவர்களில் 15 பேரை வெளிநாடு அனுப்புவதாக கூறி சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களை விட்டுவிட்டு பூரணச்சந்திரன் தலைமறைவானார். விமான நிலையத்தில் விசாரித்தபோது 15 பேருக்கும் வழங்கப்பட்டது போலி விசா என தெரியவந்தது.

இதுகுறித்து இசைக்க–லைஞர்கள் அனைவரும்' மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாவிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில், 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் நரசிம்மபாரதி, அசோக், ரமேஷ், சங்கர் உள்ளிட்ட தனிப்படையினர் பூரணச்சந்திரனின் செல்போன் டவரை பரிசோதித்ததில் அவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் பூரணச்சந்திரனை கைது செய்தனர். இதனையறிந்த பணம் கொடுத்து ஏமாந்த இசைக்கலைஞர்கள் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பூரணச்சந்திரன் இன்று மலேசியா நாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த ரூ.12 லட்சத்தை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News