உள்ளூர் செய்திகள்

தென்மலை பகுதியில் பற்றி எரியும் காட்டு தீ.

சிறுமலையில் 3-வது நாளாக பற்றி எரியும் காட்டு தீ அரிய வகை மரங்கள் கருகின

Published On 2023-03-02 13:06 IST   |   Update On 2023-03-02 13:06:00 IST
  • கடந்த 3 நாட்களாக அகஸ்தியர்புரம்- தென்மலை பகுதியில் அடிக்கடி காட்டுதீ பற்றி மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.
  • இதில் சிக்கி பல ஏக்கர் நிலங்களில் உள்ள மூலிகை செடிகள், அரியவகை மரங்கள் கருகி நாசமாகின.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே சிறுமலையில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதில் காட்டெருமை, கடமான், காட்டுபன்றி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் ஏராளமான பறவைகளும் உள்ளன. குளிரின் தாக்கம் குறைந்து கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் வனப்பகுதியில் வறண்ட வானிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அகஸ்தியர்புரம்- தென்மலை பகுதியில் அடிக்கடி காட்டுதீ பற்றி மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதில் சிக்கி பல ஏக்கர் நிலங்களில் உள்ள மூலிகை செடிகள், அரியவகை மரங்கள் கருகி நாசமாகின. தீயை அணைக்க வனத்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். திண்டுக்கல் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று வனத்துறையினருடன் இணைந்து காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், சிறுமலை தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக மாறியுள்ளது. இதில் சிலர் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வீசிசெல்வதால் அடிக்கடி காட்டு தீ பற்றுகிறது. மேலும் வறண்ட வானிலையும் ஒரு காரணமாகும். எனவே வனத்துறையினர் சிறுமலைக்கு வரும் வாகனங்களை சோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். காட்டுதீயை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றனர்.

Tags:    

Similar News