உள்ளூர் செய்திகள்

வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்- கிருஷ்ணகிரி கலெக்டர் பேச்சு

Published On 2022-08-16 16:00 IST   |   Update On 2022-08-16 16:00:00 IST
  • மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களும் ஒரே சீரான வளர்ச்சியை பெறவேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
  • சுதந்திர போராட்ட தியாகியின் இல்லத்திற்கு கலெக்டர் நேரடியாக சென்று அவரது வாரிசுதாரருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட, பர்கூர் ஊராட்சி ஒன்றியம் காட்டாகரம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளை பாறையூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் முதியோர் உதவி தொகை, பட்டா, குளம் தூர்வாருதல் உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கைகளை கலெக்டரி டம் கூறினார்கள்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களும் ஒரே சீரான வளர்ச்சியை பெறவேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மாவட்ட நிர்வாகம் குடிநீர், மின்சார வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி, நீர்பாசன திட்டங்கள், தனி நபர் வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தகுதியான நபர்களுக்கு அரசின் பலன்கள் நேரடியாக சென்று சேருவதற்கு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த கிராம சபை கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்கவும், வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து காவே ரிப்பட்டணம் பேரூராட்சி அம்பேத்கார் நகரை சேர்ந்த மறைந்த ராஜப்பன் என்ற சுதந்திர போராட்ட தியாகியின் இல்லத்திற்கு கலெக்டர் நேரடியாக சென்று அவரது வாரிசுதாரருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

இதே போல மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் இல்லங்களுக்கு வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சந்தானம், தாசில்தார் பிரதாப், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, வெங்கடராமகணேஷ், ஊராட்சி மன்றத் தவைர் ரங்கநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பழனி, ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ், துணைத் தலைவர் கவுசல்யா, ஊராட்சி செயலர் கஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் லதா மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதார துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News