உள்ளூர் செய்திகள்

பூக்கள் வரத்து குறைவால் கிலோ ரூ.2000-க்கு விற்பனை

Published On 2023-01-13 13:10 IST   |   Update On 2023-01-13 13:10:00 IST
  • கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது.
  • இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளான அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி, செவ்வந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் குண்டு மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மல்லிகை பூ செடிகளை பட்டம் மாறுவதற்காக விவசாயிகள் கடந்த மாதம் வெட்டி விட்டனர். இதனால் மிக குறைந்த அளவிலேயே மல்லிகை பூ செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு ஏலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எருமைப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது. இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மல்லிகை பூ செடி பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

மல்லிகை பூ செடிகள் பட்டம் மாறுவதற்காக கடந்த மாதம் வெட்டி விடப்பட்டது. தற்போது செடிகள் பூக்கும் நிலைக்கு வராமல் உள்ளன. மேலும் இந்த பகுதியில் பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மல்லிகை பூ வரத்து முற்றிலும் குறைந்தது.கடந்த மாதம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ வந்த மல்லிகை பூக்கள், தற்போது ஒரு கிலோ கூட வரவில்லை. இதனால் நேற்று வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் ஒரு கிலோ மல்லிகை பூவை ரூ.2000-க்கு ஏலம் எடுத்து சென்றனர். இனிவரும் நாட்களிலும் இந்த விலை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News