உள்ளூர் செய்திகள்

வெள்ளம் வந்தால் சமாளிப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம்

Published On 2023-07-27 08:54 GMT   |   Update On 2023-07-27 08:54 GMT
  • அவசர காலங்களில் எப்படி செயல்படுவது என்பது தொடர்பாக விளக்க கையேடுகளும் வழங்கப்பட்டன.
  • 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சூலூர்,

மேற்கு தொடர்ச்சி மலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இந்த நிலையில் சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த மாதம் 8-ந்தேதி வருவாய், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊராட்சி வளர்ச்சி துறை, மின் துறை, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை, பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சிகள் நடத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து நொய்யல் ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக சூலூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் தீயணைப்புத்துறை ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த ஒத்திகை சோதனை நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ஆற்றங்கரைேயோரம் வசிப்போர் எப்படி தற்காத்து கொள்வது மற்றும் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் ஆகியவை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க பயிற்சிகள் தரப்பட்டன. அவசர காலங்களில் எப்படி செயல்படுவது என்பது தொடர்பாக விளக்க கையேடுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சூலூர் தாசில்தார் நித்திலவள்ளி, தீயணைப்பு துறை அலுவலர் ரகுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News