உள்ளூர் செய்திகள்

மத்திய மந்திரி பகவத் காரத்

டிஜிட்டல் கரன்சி திட்டம்...பிரதமர் விரைவில் தொடங்கி வைக்கிறார்- நிதித்துறை இணை மந்திரி பேட்டி

Published On 2022-10-12 19:14 GMT   |   Update On 2022-10-12 19:14 GMT
  • தகுதியான பயனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதாரத்தில் இந்தியா சர்வதேச அளவில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

விருதுநகரில் நடைபெற்ற முன்னோடி வங்கி மூலம் நிதி உள்ளடக்கம் தொடர்பான மதிப்பாய்வுக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் கலந்து கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மற்றும் பலதுறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பிரதம மந்திரி காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டம் , கல்வி கடன் , பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் பிரதமர் ஜீவன் ஜோதி காப்பீடு திட்டம், பிரதமர் விபத்துக் காப்பீடு திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்களை 111 கிராமங்களில் 68 வங்கிக் கிளைகளின் மூலம் அனைத்து தகுதி வாய்ந்த பயனாளிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசுத் திட்டங்களை விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கு உறுதுணையாக செயல்பட்ட 68 வங்கியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை இணை மந்திரி, இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் கரன்சி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார் என்றார். 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 75 டிஜிட்டல் வங்கிகளை பிரதமர் தொடங்கி வைத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக பொருளாதாரத்தில் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறியுள்ளதாக கூறிய அவர், பிரதமரின் தற்சார்பு திட்டத்தினை ஊக்குவிக்கும் விதமாக தகுதியான பயனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News