உள்ளூர் செய்திகள்

கருப்பு முருகானந்தம்

நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசியதை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளாது-மாநில செயலாளர் பேட்டி

Published On 2022-08-14 10:18 GMT   |   Update On 2022-08-14 10:18 GMT
  • மதுரையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க.வினர் காலணி வீச்சு சம்பவம் என்னைப் பொறுத்தவரை ஏற்று கொள்ள முடியாத விஷயம் தான்.
  • எங்கள் தலைவரை பொறுத்தவரை யார் தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை நிச்சயம் எடுப்பார்.

திருவாரூர்:

திருவாரூரில் பா.ஜ.க. மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாஸ்கர் திரு.வி.க. கல்லூரியில் நடந்த திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வில் தனக்கு பதிலாக வேறு ஒருவரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்ததாக தவறான தகவல் பரபரப்பட்டு வருகிறது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது . கடந்த 2020 பி.ஏ. தேர்வு எழுத அவர் விண்ணப்பித்துள்ளார். முதல் ஆண்டு தேர்வு ஆன்லைன் மூலம் எழுதியுள்ளார். இந்த ஆண்டு இரண்டாமாண்டு தேர்வு எழுதுவதற்கு தேர்வுக்கான எந்தவித கட்டணமும் அவர் கட்டவில்லை.

ஆனால் அவருக்கு பதிலாக ஒருவர் தேர்வு எழுதினார் என்பது புரியவில்லை. எனவே இதுகுறித்து முறையான விசாரணை நடத்திட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளோம். நியாயமான நேர்மையான விசாரணை நடத்தப்படும் என காவல்துறை எங்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து மாநில தலைவர் அண்ணாமலை கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

எங்கள் தலைவரை பொறுத்தவரை யார் தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை நிச்சயம் எடுப்பார். பா.ஜனதா மீது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்கிற நோக்கத்தில் தி.மு.கவினர் செய்த சதியாக இருக்குமோ என நினைக்கிறோம்.

மதுரையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க.வினர் காலணி வீச்சு சம்பவம் என்னைப் பொறுத்தவரை ஏற்று கொள்ள முடியாத விஷயம் தான். எங்களது கட்சியும் கூட அதை ஏற்றுக் கொள்ளாது. ஆனால் என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. அமைச்சர் எதோ பேசியதாக கூறுகிறார்கள். இது எப்படி இருந்தாலும் இப்படிப்பட்ட சம்பவம் நடக்கக்கூடாது நடந்திருக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News