பருத்தி ஏலத்தை தடுத்து நிறுத்திய விவசாயிகள்- பரபரப்பு
- இ-நாம் திட்டத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறால் 60 விவசாயிகளுக்கு ரூ.60 லட்சம் வரவு வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் ஏற்காததால் வியாபாரிகள் திரும்பி சென்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவிலில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இ-நாம் என்று அழைக்கப்படும் மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை மூலம் விவசாயிகள் கொண்டு வரும் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இங்கு கடந்த மாதம் 20ம் தேதி 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.2 கோடியே 96 லட்சத்து 66 ஆயிரம் மதிப்புள்ள 3225 குவின்டால் பருத்தியை விற்பனை செய்தனர்.
இதற்கான தொகையை கடந்த 7ம் தேதிக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். பெரும்பாலான விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்ட நிலையில் இ-நாம் திட்டத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறால் 60 விவசாயிகளுக்கு ரூ.60 லட்சம் வரவு வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பருத்தி ஏலம் நடைபெற இருந்தது. இதனை அறிந்த 60 விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்த பருத்திக்கான தொகை ரூ.62 லட்சத்தை கொடுத்த பிறகு ஏலத்தை நடத்தி பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும் என கூறி தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் ஏற்காததால் வியாபாரிகள் திரும்பி சென்றனர்.
இதனால் பருத்தி ஏலம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் 500 விவசாயிகள் சுமார் 1000 குவிண்டால் பருத்தியை விற்பனை செய்ய முடியாமல் கிடங்கில் பருத்தி மூட்டைகளை வைத்து தவித்து வருகின்றனர்.