உள்ளூர் செய்திகள்

மரக்காணம் பகுதியில் விவசாய பயிர்களை அழிக்கும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் அவதி

Published On 2023-06-06 07:47 GMT   |   Update On 2023-06-06 07:47 GMT
  • மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.
  • பன்றிகளை விவசாயிகள் இரவு நேரத்தில் துரத்தி சென்றால் விவசாயிகளையே திருப்பித் தாக்க வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கந்தாடு, புதுப்பாக்கம் ,நடுக்குப்பம் ,அசப்போர், ஊரணி, ராய நல்லூர், வட அகரம், காக்காபாளையம் , திருக்கனூர், வண்டி பாளையம், காணி மேடு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் காடுகளை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது . மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் தைல மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்ந்து அடர்த்தியான காடுகளாக உள்ளது .இதுபோல் இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏரிகள், ஓடைகள் குட்டைகள் உள்ளது.

இப்பகுதிகளில் அடர்ந்த சீமை கருவேல மரங்கள் இருக்கின்றது. இங்குள்ள காடுகள் மற்றும் கருவேல மரங்கள் இருக்கும் இடத்தில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றது. இந்த காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் விவசாயிகள் பயிர் செய்துள்ள நெல் ,மணிலா, தர்பூசணி மரவள்ளி போன்ற பயிர்களை அழித்து நாசப்படுத்துகின்றது. இதுபோல் விவசாய பயிர்களை அழித்து நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகளை விவசாயிகள் இரவு நேரத்தில் துரத்தி சென்றால் விவசாயி களையே திருப்பித் தாக்க வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சிய போக்காக இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். தற்போது காடுகளை ஒட்டி உள்ள விவசாய பயிர்களை அழிக்கும் காட்டு விலங்குகளை தடுக்க அரசு சார்பில் ஒருவித ரசாயன மருந்தை மானிய விலையில் கொடுக்கின்றனர்.

இந்த ரசாயன மருந்தை வயல்வெளியில் தெளித்து விட்டால் வனவிலங்குகள் விவசாய பயிர்களை அழிக்காது. இது போன்ற ரசாயன மருந்துகளை பல இடங்களில் வேளாண் துறை அதிகாரிகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். எனவே மரக்காணம் மட்டும் சுற்றுப்புற ப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு காட்டுப்பன்றிகளில் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க இது போன்ற ரசாயன மருந்துகளை உடனடியாக வழங்கி விவசாயி களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

Similar News