உள்ளூர் செய்திகள்

கருகிய வாழைகன்றுகளுடன் மனு அளிக்க வந்த விவசாயிகளை படத்தில் காணலாம்.

கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி கருகிய வாழை பயிருடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்

Published On 2023-07-31 08:55 GMT   |   Update On 2023-07-31 08:55 GMT
  • பாபநாசம் அணையில் திறந்து விடப்படும் நீரானது கோடகன் கால்வாயில் வரும்போது கல்லூர் வரை மட்டுமே வந்து சேர்கிறது.
  • 70 ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழைகள் தண்ணீர் இன்றி கருகி உள்ளது.

நெல்லை:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட குழு தலைவர் செல்லத்துரை தலைமையில் செயலாளர் மாயகிருஷ்ணன், பொருளாளர் முருகன் மற்றும் விவசாயிகள் ஏராள மானவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது அவர்கள் கால்வாய்களில் தண்ணீர் திறந்து பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய படியும், கருகிய வாழைக்கன்றுகளை கையில் ஏந்தியபடியும் வந்தனர். தொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டம் நெல்லை தாலுகாவுக்கு உட்பட்ட நரசிங்கநல்லூர் கிராமத்தில் சுமார் 70 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கும், சுத்தமல்லி, கருங்காடு, அத்திமேடு உள்ளிட்ட ஊர்களில் உள்ள குளங்களுக்கும், தாமிரபரணி ஆற்றில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது கோடகன் கால்வாய் மூலமாக வந்து சேர்கிறது. அதன் மூலம் பாசன வசதி பெற்று நெல், வாழை உள்ளிட்டவை பயிரிட்டு வருகிறோம்.

தற்போது பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது கோடகன் கால்வாயில் வரும்போது கல்லூர் வரை மட்டுமே வந்து சேர்கிறது. அதன் கீழ் உள்ள சுத்தமல்லி, நரசிங்கநல்லூர், கருங்காடு, அத்திமேடு உள்ளிட்ட பகுதியில் உள்ள குளங்களுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் வந்து சேர முடியாமல் போய்விடுகிறது.

இதனால் நாங்கள் 70 ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழைகள் தண்ணீர் இன்றி கருகி உள்ளது. மேலும் கால்நடைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Tags:    

Similar News