உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் 7 பேர் கைது- கள்ளநோட்டு வழக்கில் மேலும் 6 பேர் சிக்கினர்

Published On 2023-01-07 05:50 GMT   |   Update On 2023-01-07 05:50 GMT
  • களப்பாகுளம் பகுதியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • விசாரணையில் கைதான கிருஷ்ணவேணியின் கணவரான சிவக்குமார் உள்பட மேலும் 6 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பகுதியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கத்தை கத்தையாக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருந்தது. விசாரணையில் அவை கள்ளநோட்டுகள் என்பதும், ஈரோட்டில் இருந்து கோவில்பட்டி வழியாக சங்கரன்கோவிலுக்கு கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த காரில் வந்த வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(வயது 49), சந்தோஷ்(32), சிராஜ்கரிம்(44), வீரபத்ரன்(34), ஜெகதீஸ்(38), ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணவேணி(23), வளர்மதி(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதான கிருஷ்ணவேணியின் கணவரான சிவக்குமார்(34) உள்பட மேலும் 6 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 6 பேரும் பதுங்கியிருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்து அங்கு விரைந்து சென்று அவர்களை பிடித்தனர்.

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த யாரிடம் கொடுப்பதற்காக கள்ளநோட்டுகளை காரில் எடுத்து வந்தனர்? எங்கு வைத்து பணத்தை மாற்ற திட்டமிட்டனர்? இவ்வளவு நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News