உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான ‘விழுதுகளை வேர்களாக்க” என்கிற உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

முதல் முயற்சி தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்- மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை

Published On 2023-05-25 09:33 GMT   |   Update On 2023-05-25 09:33 GMT
  • மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த கல்வியை கற்க வேண்டும்.
  • மாணவர்கள் நன்றாக படித்து நுழைவுத்தேர்வு எழுதி வேலை வாய்ப்பு பெற வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் மறுமலர்ச்சி தடம் மற்றும் தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகத்துடன் இணைந்து நடத்தும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான 'விழுதுகளை வேர்களாக்க" என்கிற உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

இதை கலெக்டர் கே.எம்.சரயு தொடங்கி வைத்து பேசியதாவது:-

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்களில் குறைவான மாணவர்களே உயர்கல்விக்கு செல்கின்றனர். நன்றாக படித்த, தனித்திறமைகள் உள்ள பல மாணவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர். அத்தகைய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதன் மூலம் என்னென்ன படிப்புகள் உள்ளன, அந்த படிப்புகளை படித்த பின் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும். மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த கல்வியை கற்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படித்து நுழைவுத்தேர்வு எழுதி வேலை வாய்ப்பு பெற வேண்டும்.

முதல் முயற்சி தோல்வி அடைந்தாலும் கவலைப்படாமல், தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். இக்காலகட்டத்தில் வேலைவாய்ப்பு பெறுவது என்பது கடுமையாக உள்ளதால் மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கான திட்டங்கள், தங்களுக்கான தனித்திறமைகளை கண்டறிந்து அதற்கான படிப்புகளை படிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், ஒருங்கிணைப்பாளர் (மக்கள் மறுமலர்ச்சி தடம்) சங்கர்,

கல்வி ஆலோசகர்கள் அமுதவள்ளி, இளையராஜா, தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் நலத்துறை) கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News