உள்ளூர் செய்திகள்

கூட்டமாக சுற்றி திரியும் காட்டு யானைகள்

Published On 2023-07-09 07:36 GMT   |   Update On 2023-07-09 07:36 GMT
  • காட்டு யானைகள் கூட்டமாக சாலையில் வந்து நின்றன.
  • வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இருந்து செல்போனில் யானை கூட்டத்தை படம் பிடித்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

இந்த வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி காட்டை விட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி வருகின்றன.

அவ்வாறு வெளியேறும் யானை கூட்டம் அடிக்கடி வனப்பகுதி ரோட்டில் வந்து இருக்கின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி என்ற இடத்தில் திடீரென 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக சாலையில் வந்து நின்றன. அந்த யானைகள் ரோட்டில் அங்கும் இங்குமாக உலா வந்தன.

ரோட்டில் யானை கூட்டம் இருப்பதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்தி விட்டனர். சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இருந்து செல்போனில் யானை கூட்டத்தை படம் பிடித்தனர்.

சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு யானை கூட்டம் ரோட்டை கடந்து மீண்டும் வனபகுதிக்குள் சென்றன. அதன் பின்னரே வாகனங்கள் அங்கிருந்து செல்ல தொடங்கியது.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானை கூட்டம் அடிக்கடி இங்கு வந்து சாலையை கடக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் வாகனங்களில் இருந்து இறங்கி யானைகள் கூட்டம் அருகே சென்று செல்பி எடுக்கக்கூடாது.

அதை மீறி எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News