உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் திருட்டு போன மினி லாரியை ஜி.பி.எஸ். உதவியுடன் கோவையில் மீட்ட போலீசார்

Published On 2023-01-20 15:06 IST   |   Update On 2023-01-20 15:06:00 IST
  • நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிலாரி திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • அலுவலக அறை உடைக்கப்பட்டு உள்ளே சி.சி.டி.வி. கேமிரா சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

பவானி:

ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த வேட்டுவபாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (58). இவர் அதே பகுதியில் பப்பாளியில் இருந்து ஜாம் மற்றும் சாஸ் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை 7.30 மணிக்கு திரும்ப வந்த பார்த்து பொழுது காம்பவுண்ட் கேட் உடைக்கப்பட்டு நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிலாரி திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் உள்ளே சென்று பார்த்த போது அலுவலக அறை உடைக்கப்பட்டு உள்ளே சி.சி.டி.வி. கேமிரா சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர் அலுவலகத்திற்குள் உள்ளே புகுந்து மினிலாரி சாவியை எடுத்து திருடி சென்றது தெரிய வந்தது. திருட்டு போன லாரியின் மதிப்பு ரூ. 13 லட்சம் இருக்கும்.

இது குறித்து திருமூர்த்தி சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சித்தோடு போலீசார் கோவை-சேலம் போலீசாரிடம் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.

லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். மூலம் கண்காணித்த போது லாரி கோவை கொடிசியா அருகே சென்றது தெரிய வந்தது.

இது குறித்து கோவை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவையில் நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசார் உடனடியாக அந்த திருட்டு லாரியை மடக்கி பிடித்தனர்.

அப்போது லாரியை திருடியது ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (29) என தெரிய வந்தது. பின்னர் அர்ஜுனனை போலீசார் கைது செய்து சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.


மேலும் திருட்டு போன லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் அர்ஜுனன் மீது ஏற்கனவே 7 திருட்டு வழக்குகள் நிலவையில் இருப்பது தெரிய வந்தது.

Tags:    

Similar News