உள்ளூர் செய்திகள்

சலவை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-02-21 09:28 GMT   |   Update On 2023-02-21 09:28 GMT
  • வீட்டிலிருந்து வெளியில் சென்ற ஆறுமுகன் அதன் பின் வீடு திரும்பவில்லை.
  • மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

ஈரோடு:

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்துள்ள ராமலிங்க புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (46). சலவைத் தொழிலாளி.

இவரது மனைவி பாப்பா (41). கடந்த ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் ஆறுமுகத்துக்கு தலையில் அடிப்பட்டது. தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

விபத்துக்கு பின்னர் அவருக்கு மன நல பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியில் சென்றுவிடுவார். பின்னர் அவராகவே திரும்பி வந்து விடுவார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. ஆறுமுகத்தின் மனைவி பாப்பா மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் அவர் கொடுமுடி பஸ்சில் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து கொடுமுடி பகுதியில் அவரை தேடி வந்த போது கொடுமுடி காவிரி ஆற்றங்கரை இரும்பு பாலம் அருகில் மரத்தில் ஆறுமுகம் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News