உள்ளூர் செய்திகள்

கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

Published On 2022-07-16 09:25 GMT   |   Update On 2022-07-16 09:25 GMT
  • காதலில் உறுதியாக இருந்த தங்கத்துரை, நர்மதா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
  • இதுகுறித்து விசாரித்த மகளிர் போலீசார் இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

ஈரோடு:

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, தம்பிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (24). டிப்ளமோ முடித்து பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நர்மதா (23) பி.எஸ்.சி. பட்டதாரி. 2 பேரும் ஒரே பகுதி என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் தங்களது காதலில் உறுதியாக இருந்த தங்கத்துரை, நர்மதா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 13-ந் தேதி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்களால் அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த தங்கதுரை, நர்மதா தம்பதிகள் இன்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்களை ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து தங்கதுரை, நர்மதா மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

இதுகுறித்து விசாரித்த மகளிர் போலீசார் இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்ததும் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

Tags:    

Similar News