உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க தோட்டக்கலை துறை யோசனை

Published On 2022-10-02 10:15 GMT   |   Update On 2022-10-02 10:15 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது இயற்கை இடர்பாடுகளால் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • மழை நீர் வடிந்த பின் பயிர்களுக்க ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்க வேண்டும்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் மரகதமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது இயற்கை இடர்பாடுகளான புயல், மழை, வெள்ள பெருக்கால் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு, மரங்களின் சுமையை குறைக்க வேண்டும். காற்றால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைக்க வேண்டும். மழை நீர் தேக்கத்தை குறைக்க உபரி நீர் வடிந்த பின் நடவு அல்லது விதைப்பு பணிகளை செய்ய வேண்டும்.

வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கு வடிகால் வாய்க்கால் அமைத்து மழை நீர் தேக்கத்தை தவிர்க்கலாம். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து செடிகள் சாய்ந்து விடாமல் தடுக்க வேண்டும்.

மரங்களை சுற்றி மண் அணைத்து காக்க வேண்டும். மழை நீர் வடிந்த பின் பயிர்களுக்க ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்க வேண்டும். இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவர்த்தி செய்யலாம்.

தோட்டங்களில் பசுமைக்குடில், நிழல் வலைக்குடில் அமைத்திருந்தால் அதன் அடிப்பக்கம் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைத்து உறுதி செய்ய வேண்டும். பழப்பயிர், மிளகு, கொக்கோ, வாழை, காய்கறி, மரவள்ளி, பூக்கள் போன்ற பயிர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News