உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு சங்கத்தில் மோசடி; தலைவர் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு

Published On 2023-05-03 09:43 GMT   |   Update On 2023-05-03 09:43 GMT
  • விசாரணை நடத்தியதில் ரூ.25 லட்சத்து 53 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது.
  • அதன் அடிப்படையில் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த சவுண்டப்பூர் தொடக்க கூட்டுறவு வேளாண் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்க கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தின் தலைவராக அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் பதவி வகித்து வருகிறார்.

சங்க உறுப்பினர்களுக்கு பயிர் கடன், நகை கடன் வழங்கப்பட்டு 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை வசூலிக்கப்பட்ட பணம் வங்கி கணக்கில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் விசாரணை நடத்தியதில் ரூ.25 லட்சத்து 53 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த மோசடியில் சங்க தலைவர் ரமேஷ் அவருக்கு உடந்தையாக சங்க ஊழியர்களான கோபியை சேர்ந்த சத்தியமூர்த்தி (53), தங்கமுத்து (55) ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது.

இது குறித்து ஈரோடு வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News