உள்ளூர் செய்திகள்

கிரானைட் குடோனில் தீ விபத்து

Published On 2022-08-16 10:08 GMT   |   Update On 2022-08-16 10:08 GMT
  • கார், மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ள செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
  • இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு, ஆக.16 -

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (55). இவர் சத்தியமங்கலம்- கோபிசெட்டிபாளையம் சாலையில் அரியப்பம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே கிரானைட் மற்றும் டைல்ஸ் கற்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

கடைக்கு பின்புறம் பணியாளர்கள் தங்குவதற்கான குடோன் மற்றும் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

மேலும் அதே பகுதியில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று கார், மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ள செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகைகள் வெளியேறுவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் செட்டில் வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசமானது.

நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News