டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- செயலாளர் கோகுலகிருஷ்ணன், கவுரவ தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் பிரபு உள்பட 70-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பணி புரிந்து வருகின்றனர். தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவர்களின் பணி நேரமாகும்.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் டாக்டர்கள் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மணி நேரம் வேலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மதியம் டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் கோகுலகிருஷ்ணன், கவுரவ தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் பிரபு உள்பட 70-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.