உள்ளூர் செய்திகள்

அடுத்தடுத்து முறிந்து விழுந்த மரங்களால் பரபரப்பு

Published On 2023-11-03 15:39 IST   |   Update On 2023-11-03 15:39:00 IST
  • அடுத்தடுத்து 4 மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்தது.
  • சாலையின் நடுவே இருந்த மின் கம்பிகளும், 2 மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன.

ஈரோடு:

ஈரோட்டில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நேற்று மதியம் மாநகர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

ஈரோடு நகரில் பன்னீர்செல்வம் பூங்கா, பஸ் நிலையம், சம்பத் நகர், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 15 நிமிடம் கனமழை பெய்தது. மழையின் போது பலத்த காற்றும் வீசியது. இதனால் ஈரோடு ஈ.வி.என்.சாலையில் அடுத்தடுத்து 4 மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்தது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மரம் விழுந்தது. பெரியார் நகரை சேர்ந்த 20 வயது வாலிபருக்கு காயம் ஏற்பட்டது.

அவர் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலையின் நடுவே இருந்த மின் கம்பிகளும், 2 மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை தடை செய்து மாற்று வழியில் திருப்பி விட்டனர். மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பொக்லைன் உதவியுடன் மரங்களை வெட்டி அகற்றினர்.

மேலும் சாலையில் சாய்ந்து விழுகின்ற அபாய கரமான நிலையில் இருந்த மேலும் சில மரங்களை பொக்லைன் மூலமாக கீழே தள்ளி அப்புறப்படுத்தினர். மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதற்கு பிறகே போக்குவரத்துக்கு அதிகாரிகள் அனுமதித்தனர்.

இதேப்போல் மொடக்குறிச்சி, கொடிவேரி, நம்பியூர் போன்ற பகுதியில் இடியுடன் கன மழை பெய்தது.

Tags:    

Similar News