அத்திக்கடவு-அவினாசி திட்ட தொட்டிக்குள் தவறி விழுந்து தொழிலாளி பலி
- தொட்டியில் ஒருவர் தலை குப்புற விழுந்துகிடப்பதாக அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பணியாளர்கள் இன்று காலை திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
- இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் திங்களூர் சுப்பையன் பாளையம் பிரிவு அருகில் அத்திக்கடவு -அவினாசி திட்ட பைப் லைன் செல்கிறது. அப்பகுதியில் தண்ணீர் திறந்து விடும் வால்வு உள்ள இடத்தில் சுமார் 3 அடி அகலத்தில் தொட்டி கட்டியுள்ளனர்.
இந்த தொட்டியில் ஒருவர் தலை குப்புற விழுந்துகிடப்பதாக அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பணியாளர்கள் இன்று காலை 8.30 மணியளவில் திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த நபரை மீட்டு பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர் திங்களூர் நீல கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (48) என்பதும், நேற்று இரவு தண்ணீர் திறந்துவிடும் வால்வு அமைக்கப்பட்டுள்ள தொட்டி மீது அமர்ந்து மது அருந்திய போது போதையில் தவறி தொட்டிக்குள் தலை குப்புற கவிழ்ந்து விழுந்து தலையில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.