ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை
- இரவு திடீரென சாரல் மழை விழுந்தது. அதைத்தொடர்ந்து பலத்த மழையாக பெய்ய தொடங்கியது.
- அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. இரவு 9.45 மணிஅளவில் திடீரென சாரல் மழை விழுந்தது. அதைத்தொடர்ந்து பலத்த மழையாக பெய்ய தொடங்கியது.
சுமார் ஒரு மணிநேரம் இடைவிடாமல் மழை கொட்டியது.இதனால் ஈரோடு பஸ் நிலையம், தில்லை நகர், பன்னீர் செல்வம் பூங்கா, வீரப்பன் சத்திரம், பெரியவலசு, சூரம்பட்டி, ரெயில் நிலையம், கருங்கல் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
ஆர்.கே.வி.ரோடு, சத்திரோடு, பெருந்துறை ரோடு, காளைமாட்டு சிலை, காவிரிரோடு, குப்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. மேலும் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக நாச்சியப்பா வீதி, முனிசிபல்காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கழிவுநீரும், மழை தண்ணீருடன் கலந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தார்கள்.
இதன் எதிரொலியாக ஈரோடு வ.உ.சி பூங்கா மார்க்கெட் பகுதியில் சேரும் சகதியுமாக காட்சி அளித்ததால் இன்று காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதேபோல் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இங்கு அதிகபட்சமாக 80 மி.மீ. மழை பதிவானது.