உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. கிளை செயலாளர் விபத்தில் பலி

Published On 2022-12-21 09:43 GMT   |   Update On 2022-12-21 09:43 GMT
  • செங்கோட்டையன் வந்து கொண்டிருந்த மொபட்டும், ஆனந்த் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
  • விபத்தில் செங்கோட்டையன் தூக்கி வீசப்பட்டார். ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மொடக்குறிச்சி:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஆலங்கட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன் (வயது 70). இவர் 13-வது வார்டு அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவர் வீட்டுக்கு அருகே உள்ள குடிநீர் குழாயில் குடிநீர் பிடிக்க இன்று காலை தனது மொபட்டில் சென்றார்.

அப்போது முத்தூர் ரோட்டில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சிவகிரியில் பழக்கடை நடத்தி வரும் ஆனந்த் என்பவர் வந்து கொண்டி ருந்தார். ஆலங்காட்டு வலசு பகுதி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக செங்கோட்டையன் வந்து கொண்டிருந்த மொபட்டும், ஆனந்த் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் செங்கோட்டையன் தூக்கி வீசப்பட்டார். ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவ குழுவினர் முகத்தில் படுகாயம் அடைந்த செங்கோட்டையன் மற்றும் ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் வரும் வழியி லேயே செங்கோட்டையன் இறந்து விட்டதாக கூறினர்.

விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News