உள்ளூர் செய்திகள்

மீன் பிடிக்க சென்ற பெண் பரிசல் கவிழ்ந்து பலி

Published On 2023-01-12 09:51 GMT   |   Update On 2023-01-12 09:51 GMT
  • சத்தி ஈஸ்வரன் கோவில் படித்துறையில் இறங்கி பவானி ஆற்றில் பரிசல் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தார்.
  • பரிசல்லானது திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து ஆரோக்கிய மேரியை அமுக்கியது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசூர் அடுத்த மாக்கினாகோம்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (42). இவரது கணவர் அந்தோணிசாமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அந்தோணிசாமி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆரோக்கியமேரி தினமும் பவானி ஆற்றில் மீன் பிடிக்க செல்வது வழக்கம்.

அதேப்போல் நேற்றும் மீன்பிடிக்க தனது தங்கை மல்லிகாவுடன் சென்றார். இதற்காக ஆரோக்கிய மேரி பரிசலை எடுத்துக்கொண்டு சென்றார்.

சத்தி ஈஸ்வரன் கோவில் படித்துறையில் இறங்கி பவானி ஆற்றில் பரிசல் போட்டு தங்கையுடன் மீன் பிடித்து கொண்டிருந்தார்.

பின்னர் மாலை அரியப்பம்பாளையம் அம்மன் கோவில் அருகே பவானி ஆற்று தடுப்பு அணையில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது ஆரோக்கிய மேரி ஆற்றின் நடுவில் உள்ள தடுப்பணை சுவரைத் தாண்டி செல்ல பரிசலை தூக்கி போட்டு அதில் ஏற முயன்றார்.

அப்போது பரிசல்லானது திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து ஆரோக்கிய மேரியை அமுக்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தங்கை மல்லிகா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆரோக்கிய மேரியை தூக்கி மணல்மேட்டில் படுக்க வைத்து பார்த்த போது அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே ஆரோக்கிய மேரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News