உள்ளூர் செய்திகள்

திருமணத்திற்காக பரிகாரம் செய்துவிட்டு வீடு திரும்பிய வாலிபர் விபத்தில் பலி

Published On 2023-05-17 07:53 GMT   |   Update On 2023-05-17 07:53 GMT
  • நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் அங்குள்ள பாலத்தின் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது.
  • இந்த விபத்தில் துரை தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

அம்மாபேட்டை:

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, குட்டப்பட்டி அருகே உள்ள தண்ணீர் குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 29). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் துரைக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதற்கு முன் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என ஜோதிடர் கூறியதால் அதற்காக சம்பவத்தன்று காலை துரை, அவரது தாய் புஷ்பா, ஜோதிடர் மற்றும் அவரது உறவினர் வைத்தியநாதன் ஆகியோர் பவானி கூடுதுறைக்கு வந்தனர்.

பின்னர் பரிகார பூஜைகள் செய்து விட்ட பின்னர் தாயையும், ஜோதிடரையும் பஸ் ஏற்றி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் துரை ஓட்ட அவரது உறவினர் வைத்தி யநாதன் (31) பின்னால் அமர்ந்து கொண்டு பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

சுமார் 12 மணியளவில் அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை அடுத்துள்ள மீன் பண்ணை அருகே சென்றபோது துரை அணிந்திருந்த ஹெல்மட்டை கழற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் அங்குள்ள பாலத்தின் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் துரை தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். பின்னால் அமர்ந்திருந்த வைத்தியநாதன் லேசான காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துரையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலே துைர இறந்து விட்டதாக தெவித்தார்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணத்திற்காக பரிகாரம் செய்ய சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டே ஹெல்மெட்டை கழட்டி யதால் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News