உள்ளூர் செய்திகள்

4 யானை தந்தங்கள் பறிமுதல்-6 பேர் கைது

Published On 2022-09-15 07:44 GMT   |   Update On 2022-09-15 07:44 GMT
  • அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் யானை தந்தங்கள் வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • அப்போது ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை மட்டைக்குள் பதுக்கி வைத்திருந்த 3 தந்தங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்தியூர்:

அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் யானை தந்தங்கள் வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க அந்தியூர் சிறப்புதனிப்பிரிவு போலீசார் முருகன், தேவராஜ், சென்னிமலை, சசிகுமார் , பிரபுகுமார் மற்றும் சென்னையை சேர்ந்த 4 பேர் உள்பட 9 பேர்கொண்ட தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார்.

இவர்கள் கடந்தசில நாட்களுக்கு முன்பு 4 தந்தங்களை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று அந்தியூர் போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட சந்திய பாளையம் பள்ளம் என்ற இடம் அருகே சோதனை நடத்தினர்.

அப்போது ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை மட்டைக்குள் பதுக்கி வைத்திருந்த 3 தந்தங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அந்தியூர் அருகே உள்ள புதுக்காட்டை சேர்ந்த வரதராஜ் (47), சந்திபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (40), பழைய வளையபாளையம் கரும்பாறை பகுதியை சேர்ந்த பிரபுகுமார் (37), வாணிப்புத்துர் பகுதியை சேர்ந்த மாரசாமி (50), கிருஷ்ணகிரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (33), திருப்பூர் கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (33), ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான 3 பேரை தேடிவருகிறார்கள்.

இதேபோல் பர்கூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பெரியூர் பகுதியில் மாதேவன் (37) என்பவரது வீட்டில்இருந்து ஒரு தந்தத்தையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 6 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தனிப்படைபோலீசார் யானை தந்தங்களை தேடி வருகின்றனர்.  

Tags:    

Similar News