உள்ளூர் செய்திகள்

2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-01-22 09:28 GMT   |   Update On 2023-01-22 09:28 GMT
  • ஒப்பந்த நிறுவனம் கோரிக்கைளை நிறைவேற்றாததால் நேற்றிரவு முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
  • இன்று 2-வது நாளாக தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் உள்பட 132 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இப்பணியாளா்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது.

தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.707 வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ளது.

ஆனால் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதியத்தை விட குறைவாக நாளொன்று க்கு ரூ.395 மட்டுமே ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருவதாக தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். போராட்டம் காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.

தொழிலாளர் நல சட்டங்களின் படியான சட்டபூர்வமான பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

ஆனால் ஒப்பந்த நிறுவனம் கோரிக்கைளை நிறைவேற்றாததால் நேற்றிரவு முதல் மீண்டும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இரவு முழுவதும் கடும் பனியை பொறுப்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் காத்திருப்பு போரா ட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News