சிவகிரி அருகே கார் மோதியதில் 1½ வயது சிறுமி பலி
- சிவகிரி அருகே கார் மோதியதில் 1½ வயது சிறுமி பலியானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
சிவகிரி,
சிவகிரி முத்தூர் ரோடு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 32). இவரது மனைவி மோகன பிரியா (29). இவர்களுக்கு தமிழ் மாறன் (6) என்ற மகனும், 1 1/2 வயதில் தமிழினி என்ற மகளும் உள்ளனர். பூபாலனின் தாய் விஜயா (60) சிவகிரி ஜீவா தெருவில் உள்ள ஒரு தனியார் பனியன் தைக்கும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் விஜயா வேலைக்கு செல்லும் போது தனது பேத்தி தமிழினியை அழைத்து சென்றுள்ளார். சம்பவத்தன்று பனியன் தைக்கும் நிறுவனத்தின் முன்பு தமிழினி நின்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் காரை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது தமிழினி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த தமிழினியை அங்கிருந்தவர்கள் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தமிழினி இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து குழந்தையின் உடலை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.