மின்இணைப்பை துண்டிக்காமல் மின் கம்பத்தில் ஏறிய ஊழியர் மின்சாரம் தாக்கி சாவு
- மின்சாரம் துண்டிப்பு செய்யப்படாததை அறியாத ஊழியர் மின் கம்பத்தின் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
- திடீரனெ மின்சாரம் தாக்கி தூக்கிஎறியப்பட்ட ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (27). இவர் சேனண்கோட்டை மின்வாரிய சரகத்தில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பூலாங்குளம் என்ற கிராம பகுதிகளில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது.
இதனை சரி செய்வதற்காக கருப்பசாமி மற்றும் அவருடன் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்கள் பூலாங்குளம் கிராமத்திற்கு சென்றனர்.
அங்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் தனித்தனியாக பிரிந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படாததை அறியாத கருப்புசாமி மின் கம்பத்தின் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கருப்புசாமி தூக்கி வீசப்பட்டார். இதில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி கருப்பசாமி மின் கம்பத்தின் கீழே விழும் போது அருகில் மற்ற நபர்கள் யாரும் இல்லாததால் நீண்ட நேரமாக கருப்பசாமி மின் கம்பத்தின் கீழே கிடந்தார்.
அதன் பின்னர் உடன் பணியாற்றும் மின்வாரிய ஊழியர் ஒருவர் கருப்பசாமி கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் கருப்பசாமியை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.