- மின் ஊழியரான இவர் நேற்றிரவு அரிசிபாளையம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
- அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் சுருண்டு கீேழ விழுந்தார்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரத்தை சேர்ந்தவர் செம்மலை (வயது 43),
மின் ஊழியரான இவர் நேற்றிரவு அரிசிபாளையம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் சுருண்டு கீேழ விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ஆம்புலன்சில் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் செல்லும் போது அவர் உடல் நிலை மேலும் மோசமானதால் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் செம்மலை பரிதாபமாக இறந்து விட்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மின்சாரத்தை நிறுத்தாமல் அவர் மின் கம்பத்தில் ஏறி பணி செய்ததால் மின் சாரம் தாக்கியதா?, அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து மின்சாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.